Wednesday, October 30, 2013

கொலை

ஒரே அடிதான் அடித்தேன். தலை தெறித்து இரத்த வெள்ளத்தில் கிடந்தான். கொலை செய்யணும் எண்ணமே எனக்கு இல்லை.  ஆனா கோபம் வந்துட்டா என்ன செய்றேன்னு தெரியல.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியை பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. இன்னைக்கு தான் இந்த பழமொழி புரிந்தது.  நினைத்து பார்த்தாலே பயமாயிருக்கு. நானா இப்படி செய்தேன்னு எனக்கே வியப்பாயிருக்கு.

இரவு ஏழு மணி இருக்கும்.  வீட்டுக்கதவில் தொங்கும் பூட்டை விடுவித்து வீட்டுக்குள் போய் விளக்கைப் போட்டேன்.  நான் வருவதற்கு முன்னே அவன் உள்ளே இருந்தானா அல்லது நான் வந்த பிறகு அவன் உள்ளே வந்தானான்னு தெரியல.  எப்படி வந்தான்னுனு தெரியல.  உடையை மாற்றிவிட்டு முகத்தை கழுவ குளியலறைக்குச் சென்றேன்.  துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டே சமையலறைக்குச் சென்று, குளிர்சாதனப்பெட்டியை திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு தொலைகாட்சியை போட்டுவிட்டு அதின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தேன்.  ஒவ்வொரு அலைவரிசையாய் மாற்றிகொண்டிருந்தேன்.

ஸ்டார் கிரிக்கெட் அலைவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி போய்க்கொண்டிருந்தது.  இன்றைக்கு கிரிக்கெட் போட்டி இருப்பதையே மறந்துவிட்டேன்.  தெரிந்திருந்தால் சீக்கிரமே வந்திருப்பேன்.  டாஸ்சை வென்ற இந்தியா ஆஸ்திரேலியாவை, முதலில் பேட் செய்ய அழைத்திருந்தது.  50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்யை இழந்து 350 ஓட்டங்கள் எடுத்திருந்தது.  நான் பார்க்கும் போது இந்தியா விக்கெட் எதுவும் இழக்காமல் 20 ஓவர்களில் 111 ஓட்டங்கள் எடுத்திருந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.   தொலையியக்கியை கிழே வைத்துவிட்டு சுவாரசியம்மா போட்டியை பார்க்க ஆரம்பித்தேன். 

இந்தியா சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  அரை மணி நேரம் கழிந்திருக்கும்.  என் பின்னாடி யாரோ வந்து நிற்பது போல இருந்தது.  திரும்பிப்பார்த்தால் என் மனைவி, அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்தாள்.  என்னை கடந்து, பையை டீபாயின்மேல் வைத்துவிட்டு, என்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.  "இன்னைக்கு கிரிக்கெட் போட்டியா? பதினோர் மணிவரைக்கும் இன்னைக்கு டிவி ஓடும் போல?" என்று தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே கேட்டுவிட்டு, பாட்டிலில் இருந்த தண்ணீரை தன் தொண்டைக்குள் வார்த்தாள்.  "இல்ல, ஒன்றரை மணிக்கே போட்டி ஆரம்பிச்சிருக்கும்.  பத்து மணிக்கெல்லாம் முடிச்சிரும்" என்று பவ்வியமாக பதில் சொன்னேன்.  எங்க, சன் டிவியில் நாதஸ்வரம் தொடரைப் பார்க்க அலைவரிசையை மாத்த சொல்வாளோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.  நல்ல வேளை, பையிலிருந்து தன் கைபேசியை எடுத்து, Whatsapp குறுந்தகவல்களை பார்க்க ஆரம்பித்தாள்.

எல்லா குறுந்தகவல்களை படித்திருப்பாள்போல் சிறிது நேரம் கழித்து, கைபேசியை வைத்துவிட்டு, இரவு உணவை சமைக்க சமையலறைக்குள் போய்விட்டாள். அப்போதுதான் என் கழுத்தில் ஏதோ குத்தியதுபோல் ஒரு உணர்வு.  திரும்பிப்பார்த்தால் அவன் எதையோ என் கழுத்தில் குத்திவிட்டு சோபாவின் அருகில் இருந்த சுவற்றின் நடுவிலிருக்கும் இடைவெளியில் சுவரோரமாய் சோபாவின் நிழலிற்குள் தன்னை மறைத்துக்கொண்டான். வலியை பொறுக்க முடியாமல் அதனால் வந்த கோபத்தை அடக்க முடியாமல், டீபாயின் அடியிலிருந்த அந்த ஆயுதத்தை எடுத்து, சோபாவை தாண்டி, அவன் இருக்கும் திசையை நோக்கி ஒரே அடி அடிச்சேன்.  'எத்தனை பேரை இப்படி நீ தாக்கிருப்பாய்? உன்னால் எத்தனை குடும்பங்கள் வேதனை பட்டிருக்கும்? உன்னைப்போல் இருப்பவர்களின் எண்ணிக்கையில் இன்று ஒன்று குறைந்தது' என்று நான் செய்த செயலுக்கு நானே நியாபடுத்திக்கொண்டேன்.  அவன் தலையிலிருந்து தெறித்த இரத்தம் சுவற்றிலும் ஆயுதத்திலும் மேல் விழுந்தது.  சத்தம் கேட்ட என் மனைவி சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து, "என்னங்க, கொசு அடிச்சது போதும். வந்து சப்பாத்திக்கு மாவு பிசைங்க" என்று, டீபாயின் அடியிலிருந்து எடுத்து சுருட்டிய அன்றைய செய்திதாளை கையில் வைத்திருந்த என்னை பார்த்து கூறினாள்.

பின் குறிப்பு: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Image credits: blogspot.com, wordpress.com, thesundaytimes.co.uk

1 comment: